Tamilthinai - Tamil Research Oriented Website
Tamilthinai Team Essays Book Intro Magazine Intro Seminar Tamil Research

சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? கருணாநிதி பதில் சொல்லட்டும் - எதிர்வினை

முனைவர் தி.நெடுஞ்செழியன

 

அன்புள்ள திரு. எஸ்.குருமூர்த்தி அவர்களுக்கு, வணக்கம்.

சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? கருணாநிதி பதில் சொல்லட்டும் என்னும் தலைப்பில் அமைந்த தங்களின் செய்திக் கட்டுரையை 19.05.07 நாளிட்ட தினமணி நாளிதழில் படித்தேன். கட்டுரை தொடர்பான என் எதிர்வினையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதிகாசத்தின் பெயரால் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத் துரோகிகள் என முதல்வர் கருணாநிதி சொல்லியிருக்கிறார். நீங்கள் சங்கராச்சாரியார்கள் தேசத் துரோகிகளா? என வினா எழுப்பியிருக்கிறீர்கள். என்னுடைய வினா என்னவெனில், கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவப் பெருங்குடி மக்கள் பலர் இத்திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வருகிறார்கள். கடல் உயிரிகளின் வாழ்விடத்திற்கும் இனப் பெருக்கத்திற்கும் இத்திட்டம் இன்னலாக அமையும் என்றும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் எதிர்த்து வருகிறார்கள்.

அடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். காரணம் பவளப் பாறைகள் அகற்றப்படுவதால் பவளப் பாறைகள் மூலம் கிடைக்கக்கூடிய அந்நியச்செலவாணி கிடைக்காமல் போகும். சேதுசமுத்திரத் திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடிய தொகையைவிட பவளப்பாறைகள் மூலம் கிடைக்கக்கூடியத் தொகை அதிகம் என்பதை புள்ளிவிவரங்களுடனும் சான்றாதாரங்களை முன்வைத்தும் எதிர்த்து வருகிறார்கள். நர்மதை ஆற்றில் அணைக் கட்டுவதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராடி உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தோற்கடிப்பட்ட மக்கள் போராளி மேதாபட்கர் கூட சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார். இந்த நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கு இந்தத் திட்டத்தால் எந்த பயனும் விளையப்போவதில்லை. மேல்தட்டு வர்க்க செல்வந்தர்களுக்கே இத்திட்டத்தால் பயன் கிடைக்கும். ஏழை மக்களின் வாழ்க்கைக்கு உதவாத, பயன் விளைவிக்காத எந்தத் திட்டமானாலும் சரி, அது சேதுசமுத்திரத் திட்டமானாலும் அதை நான் எதிர்ப்பேன் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அண்மையில் சென்னை வந்திருந்தபோது, ஆழிப்பேரலை என்னும் சுநாமியால் இந்திய கடற்கரைகள் முழுவதும் தனியார் மயமாகி வருகிறது. சேதுசமுத்திரத் திட்டத்தால் இந்திய கடற்பகுதியே தனியார்மயமாகும் அவலம் ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்து தன் எதிர்ப்பை மக்களின் குரலாக மேதாபட்கர் பதிவு செய்துள்ளார்.

பண்பாட்டு ஆய்வாளர்கள் கூட சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சேதுசமுத்திரத் திட்டத்தால் வருமானம் பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம்கூட உயரும். அதே நேரத்தில் திட்டத்தால் பயன்பெறும் மக்கள் பண்பாட்டு தரத்தில் குறைந்துபோகும் அபாயம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இலங்கையைச் சுற்றி செல்லாமல் பல வெளிநாட்டு கப்பல்கள் தூத்துக்குடியில் சில நாட்கள் இளைப்பாறும் வாய்ப்புள்ளது. அக் கப்பல்களில் பணியாற்றும் பலநிலை தொழிலாளர்கள் பல்வேறு செலவுகளில் ஈடுபடுவார்கள். இதனால் வருமானம் குவியும். அதேவேளையில், விபச்சாரம், ஆபாச நடனங்கள் போன்ற பண்பாட்டுச் சீரழிவுகள் பெருகும். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல் உயர்ந்த பண்பாட்டின் சின்னமாய் விளங்கும் தமிழ்ப் பண்பாடு விரைவில் அழியும் அவலம் நிகழும் என எச்சரித்து எதிர்த்து வருகிறார்கள். இலங்கை அமைச்சர் ஒருவர்கூட சேதுசமுத்திரத் திட்டம் இலங்கைக்கு எதிரானது. இலங்கையின் பொருளா தாரத்தைக் குலைக்கும் செயல். சேதுசமுத்திரத் திட்டத்தைக் கைவிட்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தரைப்பாலம் அமைப்பது இலாபகரமாக இருநாடுகளுக்கும் அமையும் என்று கூறியுள்ளார். இதுபோன்று தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்பினர் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் முதல்வர் கருணாநிதி தேசத் துரோகிகள் என்று குறிப்பிடவில்லை என்பதை தாங்கள் முழுமையாக உணரவேண்டும்.

கடவுள்,மதம்,இதிகாசம் இவற்றின் பெயரால் எதிர்ப்பவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று முதல்வர் கருணாநிதி வகைப்படுத்தி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கடவுள்,மதம்,இதிகாசம் இம்மூன்றும் அறிவியல் சார்ந்தவையல்ல; நம்பிக்கை என்பதைவிட மூடநம்பிக்கை சார்ந்தவையாகும் என்பதுதான் தெளிவான உண்மையாகும். அறிவியல் முறைப்படி மெய்பிக்கப்படாத எந்த உண்மையும் அறிவுக்கு புறம்பானது என்பதும், அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டையும் மாங்கனீஸ்-டை-ஆக்ஸைடையும் ஒரு சோதனைக் குழாயில் போட்டு சூடேற்றினால் நிகழும் வேதி வினையால் கிடைக்கக்கூடியது ஆக்சிஸனாகவே இருக்கமுடியும் என்பது உண்மை. இந்த வேதி வினை எத்தனை முறை நடந்தாலும், எந்த நாட்டில் நடந்தாதலும் கிடைக்கக்கூடியது ஆக்சிஸனாகவே இருக்கவேண்டும். அமெரிக்க நாட்டில் நடந்த வேதி வினையில் கிடைத்தது நைட்ரசனாக இருந்தது என்றும் சுவிர்ச்சலாந்தில் நடந்த வேதி வினையில் கிடைத்தது கார்பன்-டை-ஆக்ஸைடாக இருந்து என்றும் விடை கிடைத்தால் வேதிப்பொருள்கள் வேறுவேறாகவே இருந்திருக்க வேண்டும் என்று நம்புவது அறிவு சார்ந்ததாகும். ஆக நம்பிக்கை என்பதும் அறிவு சார்ந்தே இருக்கவேண்டும். அறிவு சாராது "குறிப்பிட்ட" நாங்கள் அதை நம்புவோம். அதனால் எதிர்ப்போம் என்றால் எதிர்ப்புக்கு எவ்வாறு ஆதரவு கிடைக்கும். மக்களின் நலன் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து, பண்பாடு சார்ந்து நடைபெறும் எதிர்ப்புகளைக் கூட நாம் ஆய்வு செய்யலாம். ஆய்வின் முடிவில் கிடைக்கும் உண்மையைக் கூட ஏற்கலாம். ஆனால் மூடநம்பிக்கை சார்ந்தவைகளை எப்படி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளமுடியும்?

மக்கள் நலன் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்து எதிர்ப்பவர்கள் அனைவரும் கூடங்குளம் மின்னணு உலை, கிழக்கு கடற்கரைச் சாலை, பெப்சி மற்றும் கோலா நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்பு, மரபணு நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க விதைகள், மண்ணை நஞ்சாக்கும் இரசாயன உரங்கள், மரங்களை வெட்டுதல், புகைபிடிப்பிற்கு எதிர்ப்பு, புகையிலை எதிர்ப்பு என பல திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். எதிர்ப்பில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஏன் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள். கடவுள்,மதம், இதிகாசம் இம்மூன்றின் பெயரால் எதிர்ப்பவர்கள் மக்கள் நலன்கூட முன்வைக்கவில்லை என்பதை உணரவேண்டும். மக்களைப் படைத்தவர்தானே கடவுள், அந்த கடவுள் உண்டாக்கியதுதானே மதம், அந்த கடவுள் எழுதியதுதானே இதிகாசம் என்றால் சேதுசமுத்திரத் திட்டத்தையும் எல்லாம் வல்ல அந்த கடவுளே பார்த்துக் கொள்ளட்டுமே. கடவுள் இருக்கிறார் என்றால் அவர் சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்க்கட்டும். அதில் கூட மக்கள் நலன் இருக்கும். மக்கள் நலனுக்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தும் பொதுவுடைமைக்கும் எதிரான சங்கராச்சாரியார்கள் சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பது எந்த வகையில் பொருத்தப்பாடுடையது?

உலகின் வலிமையான மதத்தலைவர், ஒரு நாட்டின் அதிபர், ஐக்கிய நாடுகளின் சபையில் ஒரு நாட்டின் சார்பில் உறுப்பினர் என்ற பெருமை பூத்தவர் கிறித்தவர்களின் மதத் தலைவரான போப்பாண்டவர். அந்த போப் மதத்திற்கு கொடுக்கும் முதன்மையை விட மனிதத்திற்குக் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவர் உலக மக்களால் நேசிக்கப்படுகிறார். பேரறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று தமிழ்நாடு திரும்பும் வழியில் இத்தாலி வருகிறார். அங்கே ஓய்வெடுக்கிறார். ஓய்வின்போது அண்ணா இந்திய மாநில முதல்வர் என்ற முறையில் மரியாதை நிமித்தம் போப்பைச் சந்திக்கலாம் என்று இந்திய தூதரகம் அண்ணாவைக் கேட்டுக் கொள்கிறது. அதற்கு அண்ணா, நான் ஒரு நாத்திகன். மதவாதியான கடவுள் நம்பிக்கைக் கொண்ட போப்பைச் சந்திக்கவிரும்பவில்லை என்று பதில் தருகிறார். போப் மதம்,கடவுள் இவை சார்ந்த நம்பிக்கையை விட மனிதத்தைப் போற்றக்கூடியவர் என்ற செய்தியால் அண்ணா போப்பை சந்திக்கிறார். சந்திப்பின்போது, "இந்தியாவில் உள்ள கோவா மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய இராணடே என்பவர் இந்தியா விடுதலைப் பெற்றும் இன்றுவரையில்(1968ன் இறுதி மாதங்களாக இருக்கலாம்) சிறையில் உள்ளார். இந்திய விடுதலையின்போது பல விடுதலை கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். இராணடே விடுதலை கோராப்படக்கூடாதவர்கள் பட்டியலில் இருந்ததால் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்தியா விடுதலைப் பெற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இராணடேவின் விடுதலை கேள்விக்குறியாகவே உள்ளது. அவரின் விடுதலைக்காகத் தாங்கள் குரல் கொடுக்கவேண்டும்" என்று போப்பை அண்ணா கேட்டுக் கொண்டு, சந்திப்பின் நினைவாக கலைஞர் கருணாநிதி தமிழர்களின் பண்பாட்டு காப்பியமான சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து எழுதிய நாடக சிலம்பு என்னும் நூலின் ஆங்கிலப் பிரதியைப் போப்பிடம் வழங்கிவிட்டு விடைபெறுகிறார்.

தமிழ்நாடு திரும்பிய அண்ணா மகிழ்ச்சியடைகிறார். காரணம், அண்ணா போப்பிடம் வைத்த வேண்டு கோளுக்கிணங்க, போப் சிறையிலிருக்கும் இராணடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுகிறார். இதை உலக சமுதாயத்தின் வேண்டுகோளாக ஏற்கவேண்டும் என்று இந்திய அரசுக்குத் தெரிவிக்கிறார். இந்திய அரசு என்பது மதம் சாரா அரசு என்பதால் மதத்தலைவரான போப்பின் வேண்டுகோள் மனிதம் சார்ந்து இருப்பதால் வேண்டுகோளை நிராகரிக்காமல், இந்திய அரசு வேண்டுகோளை ஏற்று இராணடேவை விடுதலை செய்தது என்பது நிகழ்கால வரலாற்று உண்மையாகும். விடுதலை பெற்ற இராணடே நன்றி தெரிவிக்க போப்பைச் சந்திக்கிறார். அப்போது போப் நன்றிக்குரியவன் நான் அல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் தமிழ்நாட்டில் முதல்வராய் இருக்கும் அண்ணாதான் உன் நன்றிக்குரியவர் என்று இராணடேவின் நன்றியை அண்ணாவிற்குக் காணிக்கையாக்குகிறார் போப். இராணடே சொந்த ஊருக்குச் சென்று தன் சொந்தங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்பி, அண்ணாவைச் சந்திக்க தமிழ்நாட்டிற்கு வருகிறார். அண்ணா இயற்கை எய்தி சிலநாட்கள் ஆகிவிட்டன என்னும் செய்தியறிந்து இராணடே மனமுடைகிறார். நாத்திகரான அண்ணாவும் கடவுள்,மதம் சார்ந்த நம்பிக்கைக் கொண்ட போப்பும் மனிதத்தைப் போற்றும் முனையிலும் மனிதத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

மனிதத்தை எந்த காலத்திலும் போற்றாமலும், பிறப்பில் கீழோர் மேலார் என்று வேற்றுமைப் பாராட்டிக் கொண்டு, ஜாதி இருக்கவேண்டும்; அது ஷேமகரமானது என்பதை இன்றளவிலும் போற்றிக் கொண்டும், சமஸ்கிருதம் தேவபாஷை என்றும் மற்ற பாஷைகள் நீசபாஷைகள் என்றும் பழித்துக் கொண்டிருக்கும் சங்கராச்சாரிகள் எவ்வாறு தேசநலனுக்கு உகந்தவர்களாக இருக்கமுடியும். அறுதியிட்டு உறுதியாகவும் இறுதியாகவும் கூறுகிறோம் சங்கராச்சாரியார்கள் (நீங்கள் விட்டுவிட்ட காஞ்சி சங்காரச்சாரியார்கள் உட்பட) அனைவரும் தேசத் துரோகிகளே. கலைஞர் முன்மொழிந்த இந்த தேசத் துரோகிகளை உலகில் உள்ள மனிதம் போற்றும் மக்களின் சார்பில் வழி -மொழிகிறோம். கலைஞரின் முன்மொழிவையும், உலக மக்களின் வழிமொழிவையும் எதிர்கொள்ள வேண்டியதும், பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியதும் குருமூர்த்தியின் கடமையாகும். இந்தக் கடமையினை சரியாகவே குருமூர்த்தி செய்வார் என்று நம்புகிறோம்.

தமிழர்களின் வரலாற்று ஆவணங்களில் ஒன்றாய் திகழும் தினமணியில் அக்கடமையினை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம். உங்களின் கட்டுரையில் இராமர் பாலம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதால் கட்டப்பட்டது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் ஒரு சான்றைக்கூட முன்வைத்து உங்களின் வாதத்தை நிலைநிறுத்த தாங்கள் முன்வராமை ஏன்? மிக அண்மையில் நாடாளுமன்ற மக்களவையில் இராமர் பாலம் பிரச்சனையில், மைய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பாலு வால்மீகி எழுதிய இராமாயணத்தைக் கையில் வைத்துக்கொண்டு இராமர் பாலம் இருப்பதை நிலைநிறுத்துங்கள். விவாதிப்போம் வாருங்கள் என்று அழைத்தபோது பிடரி தெரிக்க ஓடியவர்கள் இராமர் பாலம் இருந்ததாக நம்புகிற பாரதீய ஜனதா கட்சியினர்தானே. விவாதத்தில் இராமர் பாலம் இருந்தது என்பது உறுதியானால் இந்த அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனே விலகிவிடுகிறேன் என்று டி.ஆர்.பாலு அறைகூவல் விட்டபோது மெளனமாய் தலைகவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்கள் அறிவியலுக்குப் புறம்பான அந்த நம்பிகையாளர்கள்தானே? நீங்கள் முன்வைத்த விவாதத்திற்கு நாங்கள் பதில் அளித்துவிட்டோம். நாங்கள் முன்வைத்துள்ள விவாதத்திற்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அதுதானே நாகரீகம் கூட.

தங்கள் உண்மையுள்ள,

முனைவர் தி.நெடுஞ்செழியன், ஆசிரியர், www.tamilthinai.com தமிழ் இணைப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி(தன்னாட்சி),மன்னம்பந்தல்,மயிலாடுதுறை.

மின்னஞ்சல் : tamilthinai@gmail.com,info@tamilthinai.com

 
 

Copyright © 2004-2007 tamilthinai.com All Rights Reserved.
Links from Tamilthinai Downloads from Tamilthinai Sitemap of Tamilthinai Contact Tamilthinai About Tamilthinai Tamilthinai Home page