அன்புள்ள காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.
செப்டம்பர் 2006 நாளிட்ட காலச்சுவடு இதழில் ''முன்தேதியிட்ட அராஜகம்'' தலையங்கம் படித்தேன்.
அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் அரசு அமைப்பு எதிலும் ஆதாயம் தரக்கூடிய வேறு பதவி எதையும் வகிக்கக்கூடாது என்ற சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதா தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்தச் சட்டம் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அரசியல்வாதிகளும் ஆதாயம் அடைவர்கள் என்றும் இந்தப் போக்கை சில பத்திரிக்கைகள் ஆதரிக்கின்றன, துணைபோகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் இது மக்களாட்சி முறையின் மக்களாட்சியின் நாயகர்கள் தொடுத்த வன்முறை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி, பின் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீண்பிடிவாதத்தால் வேலைநிறுத்த போராட்டமாக வெடித்தது. அரசு இயந்திரங்கள் செயலிழந்து போயின. அப்போது எஸ்மா சட்டத்திற்கு மேலாக டெஸ்மா என்னும் அவசர சட்டத்தின் மூலம் போராடிய அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெஸ்மா என்னும் அவசர சட்டம் முன்தேதியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை நாம் உணரவேண்டும். அவசரசட்டங்களுக்கு முன்தேதியிட முடியாது என்றாலும் ஜெயலலிதா முன்தேதியிட்டார். இதன் மூலம் ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர் என்று பாராட்டப்பட்டார், போற்றப்பட்டார், புகழப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் பல பத்திரிக்கைகள் எதிர்க்கவில்லை. வெளிப்படையான ஆதரவை தெரிவித்தன.
மக்களாட்சித் தத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் இயக்கம் செய்வதெல்லாம் சரி என்னும் ஆட்டுமந்தை மனப்பான்மையோடு இருந்து வருகிறார்கள். மக்கள் சக்தியும் இதழியல் சக்தியும் இந்த வன்முறைகளை வேரறுக்க இணைந்து செயல்படவேண்டும்.
(நவம்பர் இதழ் – 2006)